கடலூர் கலெக்டர் கார் மேதி 2 பேர் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி
கடலூர்: கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ சென்ற கார் மோதி கட்டடத் தொழிலாளிகள் 2 பேர் படுகாயமடைந்தனர்.
கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ நேற்று மதியம் 2.30 மணிக்கு தனது காரில் ஆல்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், கலெக்டரின் காரும் நேருக்கு நேர் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கட்டடத் தொழிலாளிகள் பன்னீர்செல்வம், குணா ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். காரின் முன் பகுதியின் இடது பக்கம் நொறுங்கியது. மேலும் கலெக்டரின் குழந்தை சாரு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
உடனே ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்த கலெக்டர் படுகாயமடைந்த கட்டடத் தொழிலாளர்களை தனது காரிலேயே ஏற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்பு அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே தனது குடும்பத்தினரை ஒரு ஆட்டோவில் தனது முகாம் அலுவலத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.