திவாகரன் கைதான அதே வழக்கில் மேலும் 5 பேர் கைது!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ரிஷியூர் கிராமத்தில் கஸ்தூரி என்பவரது வீடு இடிக்கப்பட்ட விவகாரத்தில் சசிகலாவின் தம்பி திவாகரனைத் தொடர்ந்து மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரிஷியூர் கிராம ஊராட்சியின் முன்னாள் தலைவர் சோம.தமிழார்வனின் கார் டிரைவர் பாலசுப்பிரமணியனுக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் வீடு ஒன்று கட்டித் தரப்பட்டது.
இவர்களது வீடு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேவியர்தன்ராஜிடம், பாலசுப்பிரமணியனின் மனைவி கஸ்தூரி புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலாவின் தம்பி திவாகரன் உள்ளிட்ட 7 பேரும் மற்றும் பலரும் தனது வீட்டை இடித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு திடீரென தூசி தட்டி எடுக்கப்பட்டு பொக்லைன் எந்திர உரிமையாளரான ஒரத்தூரைச் சேர்ந்த வீரசிவசங்கர், அவரது டிரைவர் மேலப்பூவனூர் சக்தி ஆகியோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
போலீசாரிடம் சிக்காமல் திவாகரன் தண்ணி காட்ட, அவரது மனைவியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரிக்க ஆரம்பிக்கவே, திவாகரன் வெளியே தலைகாட்டினார். இதையடுத்து கடந்த 3ம் தேதி அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டார்.
அதற்கு முன்பே மும்பையில் வைத்து அவர் பிடிபட்டதாகவும், அவரிடம் 'வேறு சில விவரங்கள்' தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு பின்னரே கைது வெளியே காட்டப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன.
இந் நிலையில் வீடு இடிப்பு வழக்கில் திவாகரனோடு புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள ரிஷியூர் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ண மேனன், அதிமுக கிளைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், அதிமுக பிரமுகர் வைத்தியநாதன், ராஜேந்திரன், கணேசன், காந்தி என்ற குணசேகரன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
இதில் தமிழ்ச்செல்வனும், வைத்தியநாதனும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்கிருஷ்ண மேனன், ராஜேந்திரன், காந்தி என்ற குணசேகரன் ஆகியோர் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் தாங்களாகவே ஆஜராக, அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.