ராவணன் ஆள் என பொய்யாக போட்டுக் கொடுத்ததால் பதவியிழந்த அதிமுக நிர்வாகி!
சென்னை: அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் செந்தில் நாதனுக்கு ராவணனுடன் தொடர்பு உள்ளதாக சிலர் போயஸ் கார்டனுக்கு புகார் அனுப்பியதால் அவரது பதவி பறிக்கப்பட்டது.
அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் உள்ள வி. செந்தில்நாதன் 06 -02 -2012 அன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து சசிகலா, அவரது உறவினர்கள் நடராஜன், ராவணன், திவாகரன், மகாதேவன், எம்.நடராஜன், பவனிவேல், ராமசந்திரன் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் என பலரையும் சமீப காலமாக ஜெயலலிதா அதிரடியாக மாற்றி வருகின்றார்.
மேலும், தமிழக அமைச்சரவையில் இருந்து சமீபத்தில் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.ஆனால் முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட பல அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படவில்லை என்பது அதிமுக தொண்டர்களின் குமுறல்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் அடாவடி, அத்துமீறல், சட்ட விதிமீறல், திமுகவினருடன் உள்ள தொடர்புகள் குறித்து வழக்கம் போல் போயஸ் கார்டனுக்கு பேக்ஸ் மூலம் புகார்களை அனுப்பி வைத்த வண்ணம் உள்ளனர்.
இதில் செந்தில்நாதனுக்கு சசிகலா உறவினர் ராவணனுடன் தொடர்பு இருப்பதாக அவரது எதிர்தரப்பு போயஸ் கார்டனுக்கு புகாரை அனுப்பியதால் அவரது பதவி பறிபோனதாகக் கூறப்படுகின்றது. ஆனால் இது பொய்ப் புகார் என செந்தில்நாதன் கூறுகிறார்.
இது குறித்து செந்தில்நாதன் கூறியதாவது,
அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருந்த எனக்கு, கரூர் மாவட்ட பாசறை செயலாளர் பதவியை அம்மா தான் வழங்கினார். எந்த சிபாரிசும் இல்லாமல் கடந்த சட்டசபைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்.
தேர்தலில் தோல்வி அடைந்த பின்பும், மாநில பாசறை செயலாளர் பதவியை அம்மா வழங்கினார். சசிகலா மற்றும் ராவணன் உள்ளிட்ட யாருடனும் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. அவர்களை நேரில் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை.
முதல்வர் அம்மா தான் எனக்கு எல்லாம். தொடர்ந்து கட்சிப் பணியாற்றி, அதிமுகவுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் விசுவாசமாக இருப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications