தைப்பூச திருவிழா: பழனியில் பல லட்சம் பக்தர்கள் திரண்டனர்-திரும்பிய திசையெங்கும் அரோகரா!
பழனி: தைப்பூச திருவிழாவையொட்டி பழனியில் முருகனை தரிசிக்க பல லட்சக்கணகான பக்தர்கள் குவிந்துள்ளனர். திரும்பிய திசையெங்கும் அரோகரா என்ற சரண கோஷம் எதிரொலிக்கிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி வந்தடைந்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக் கல்யாணம் நேற்று நடைபெற்றது.வள்ளி, தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசாமி தந்தப் பல்லக்கில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிம்மலக்னத்தில் முத்துக்குமாரசாமி வள்ளி , தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து, 8.30 மணிக்கு வெள்ளித்தேரில் முத்துக்குமாரசாமி தம்பதி சமேதரராக ரதவீதியை உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, அரோகரா என முழங்கினர். கோயில் யானை கஸ்தூரி தேரை தள்ள, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேர் ரத வீதிகளை சுற்றி நிலையை அடைந்தது.
தேரோட்டம்
தைப்பூசத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. பழனி கோயிலில் மட்டுமல்ல நகரம் முழுவதுமே முருக பக்தர்களால் நிரம்பி வழிகிறது.
அலகு குத்தி, காவடி ஏந்தி, சேவல் காணிக்கை செலுத்து அருளாடிக் கொண்டே திசையெங்கும் வழிபாடு நடைபெற்று வருகிறது.பழனியில் மட்டுமின்றி முருகன் ஆலயங்கள் அனைத்திலும் தைப்பூசத் திருவிழாவையொட்டி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
மலேசியாவில் தைப்பூசம்
மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டைப் போலவே அலகு குத்தி, காவடி ஏந்தி பத்துமலை முருகனை பக்தி பரவசத்துடன் வணங்கினர்.












Click it and Unblock the Notifications