எங்களை மீறி அணு உலையை இயக்கவும் முடியாது, இயக்கவும் விடமாட்டோம்: உதயகுமார்
சென்னை: போராட்டக்காரர்களை மீறி கூடங்குளம் அணுஉலையை இயக்கவும் முடியாது, இயக்கவும் விடமாட்டோம் என்று மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
விரிவான திட்ட அறிக்கை, தல ஆய்வறிக்கை, பாதுகாப்பு ஆய்வறிக்கை, இந்திய- ரஷ்ய அரசுகளுக்கு இடையே செய்யப்பட்டுள்ள இழப்பீடு ஒப்பந்தம், கழிவு மேலாண்மை ஆகிய அடிப்படை விவரங்களைக் கூட மத்திய அரசின் நிபுணர் குழு எங்களுக்கு தரவில்லை. ஆனால் அணுஉலை பாதுகாப்பானது என்று மட்டும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு மற்றும் அது அமைத்த நிபுணர் குழு மீது தமிழக அரசு நம்பிக்கை இழந்துவிட்டது. அதனால் தான் மாநில அரசின் சார்பில் நிபுணர் குழு ஒன்றை அமைக்கப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த குழுவில் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களையும் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இக்குழு கூடங்குளம் மக்களை சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டு அதற்கேற்ப முடிவு எடுக்க வேண்டும். எங்களை மீறி அணுமின் நிலையத்தை இயக்கவும் முடியாது, இயக்கவும் விடமாட்டோம்.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை அழிக்க நினைக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமி்ழக அரசை வலியுறுத்தியும் வரும் 26ம் தேதி சென்னையில் அணுஉலை எதிர்ப்பு மாநாடு நடத்தவிருக்கிறோம். மேலும், மயிலாப்பூர் மாங்கொல்லையில் பொதுக்கூட்டமும் நடக்கவிருக்கிறது.
இந்த மாநாட்டில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகின்றது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்கு நாங்கள் மதிப்பளிக்க விரும்பவில்லை என்றார்.
பேட்டியின்போது பெரியார் திக தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட சிலர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications