காதலர் தினம் ஒரு கலாச்சார சீர்கேடு: ராமகோபாலன் தாக்கு!
மதுரை: காதலர் தினம் இந்தியாவின் கலாச்சார சீர்கேடு என்று இந்து முன்னணி அமைப்பாளர் இராமகோபாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
நமது நாட்டைக் குறிவைத்து பல தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. சில நேரிடையாக வந்து தாக்குகின்றன, சில கொல்லைப்புறமாக , மறைமுகமாக வருகின்றன. அவை நமது பண்பாட்டை, கலாச்சாரத்தைக் கெடுக்கும் நச்சுப் பிரச்சாரங்களாக உள்ளன. அப்படிப்பட்ட ஒன்று தான் காதலர் தினம்.
இதன் நோக்கம் கலாச்சாரத்தைச் சீரழிப்பது, சந்தையை வளர்ப்பது. எவ்வாறு அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குங்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டு மக்களை மயக்குகிறார்களோ, அதே போல் காதலர் தினத்திலும் விளம்பர உத்தி மூலம் பொருள்கள் வாங்க தூண்டுகின்றார்கள்.
இதனால், நிறைவது சிலரது கஜானாதான். ஆனால் அதற்கு விலையாவது நமது மக்களின் பண்பாடு. இவை எல்லாம் தனிமனித சுதந்திரம் என்ற வாதம் பித்தலாட்டமானது. இதை அனுமதித்தால் தேசத்தின் அடையாளம் அழிந்து போகும். இந்த விஷ விதையை அலட்சியப்படுத்தினால் அது வளர்ந்து, பல கிளைகளைப் பரப்பி நாட்டை நாசம் செய்துவிடும்.
மேல்மருவத்தூர் அடிகளார், வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் மகராஜ், தவத்திரு ஜக்கி வாசுதேவ், சின்மயமா மிஷன், ராமகிருஷ்ண மடம், அமிர்தானந்த மயி ஆசிரமம், காஞ்சி சுவாமிகள், வேலூர் சக்தி அம்மா, சுவாமி தயானந்த சரஸ்வதி, மடாதிபதிகள், ஆதீன கர்த்தர்கள் போன்ற மகான்கள் இந்தக் கலாச்சார சீரழிவு நோயைத் தடுத்து நிறுத்த மக்களிடையே விழிப்புணர்வை எற்படுத்த முன் வர வேண்டும். இது காலத்தின் அவசியமும், அவசரமும் ஆகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications