ஸ்ரீரங்கத்தில் ஜெ... ரூ. 200 கோடி பணிகளைத் தொடங்கி வைத்தார்

தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதிக்கு முதல்வர் ஜெயலலிதா 3வது முறையாக இன்று விஜயம் செய்தார்.
வெற்றி பெற்ற பின்னர், முதன் முதலாக கடந்த ஆண்டு ஜுன் மாதம் 19-ந் தேதி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசினார். 2 நாட்கள் திருச்சியிலேயே முகாமிட்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் கிராமம், கிராமமாக வேனில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலின்போது அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட மு.பரஞ்சோதியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அதன்பிறகு, தற்போது 3-வது முறையாக ஜெயலலிதா இன்று ஸ்ரீரங்கம் வந்தார். ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த திருவானைக்காவல் வடக்கு உள்வீதியில் நடைபெறும் அரசு விழாவில் அவர் கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், ஏழைகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசினார்.
இன்று பிற்பகல் தனி விமானம் மூலம் திருச்சி வந்து சேர்ந்த ஜெயலலிதாவை விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்றனர்.
பின்னர் திருவானைக்காவல் வடக்கு உள்வீதிக்கு வந்தார் ஜெயலலிதா. அங்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி விழாவுக்கு முன்னிலை வகிக்கிறார். திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் வரவேற்று பேசினர்.
விழாவில், ஜெயலலிதா புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், ஏழைகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேருரை ஆற்றினார்.
ஸ்ரீரங்கத்தில் அமைய உள்ள தேசிய சட்டப் பள்ளி எனும் புதிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் ஜெயலலிதா. இது தவிர திருச்சி குழுமணி, திருச்சி ஜீயபுரம் சாலையை மேம்படுத்தும் பணிகள் மேலும் அப்பகுதியில் அமைய உள்ள இரண்டு சிறு பாலங்கள் கட்டுவதற்குரிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பேட்டைவாய்தலை கிளை மற்றும் ஸ்ரீரங்கம் நகர கூட்டுறவு வங்கி ஆகிய வங்கிகளில் குளிர்சாதன வசதிகளுடன் நவீனமயப்படுத்தப்பட்டதை திறந்து வைத்தார். இது தவிர ஏற்கனவே முடிவுற்ற பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்து பல்வேறு பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கி பேசினார்.
முதல்வர் வருகையையொட்டி திருச்சி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. விமான நிலையம் முதல் திருவானைக்காவல் வரை முதல்வரின் கார் செல்லும் பாதையில் அ.தி.மு.க கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி திருச்சி நகரில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications