மயிலாடுதுறை தனி மாவட்டமாக்குவது குறித்து பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் அமைப்பது பற்றி பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அம்மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: நாகப்பட்டிணத்தில் உள்ள மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் 4 வட்டங்கள் உள்ளன. மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் மயிலாடுதுறையில் வசிக்கின்றனர். இதனால் வரலாற்று சிறப்பு மிக்க இந்த பகுதியை புதிய மாவட்டமாக அறிவிக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் கொண்ட அமர்வு, மயிலாடுதுறை மாவட்டம் அமைக்கக் கோரும் கோரிக்கையை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications