கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் கடையடைப்பு
தூத்துக்குடி: மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாகத் திறக்கக் கோரியும் தூத்துக்குடியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் 8 முதல் 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகின்றது. இதனால் மாணவர்கள், வியாபாரிகள் என அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையில் உள்ளன. மின்வெட்டைக் கண்டித்து கடந்த வாரம் கோவையில் தொழிற்சாலை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தூத்துக்குடி, ஆறுமுகநேரி பகுதிகளில் தொடர் மின்வெட்டை கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 400 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் பலபகுதிகளில் மின்வெட்டை கண்டித்து வணிகர் சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.