மும்பையில் ரூ.1 கோடி பறிமுதல்: சிக்கலில் பிரதீபா பாட்டில் மகன், மகாராஷ்டிரா முதல்வர்
மும்பை: மும்பை மாநகராட்சிக்கு நாளை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் கடந்த 11ம் தேதி இரவு காங்கிரஸாரிடம் இருந்து ரூ.1 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக நாக்பூரைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை மாநகராட்சி தேர்தல் நாளை நடக்கின்றது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி இரவு அமராவதி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நாக்பூரைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த பணம் வறுமையில் வாடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அது ஒன்றும் வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச் செல்லப்படவில்லை என்றும் குடியரசுத தலைவர் பிரதீபா பாட்டீலின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ராவ்சாஹேப் ஷெகாவத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
வறுமையில் வாடும் கட்சி வேட்பாளர்கள் 87 பேருக்கு உதவ காங்கிரஸ் கமிட்டியிடம் நிதி கேட்டேன். அந்த 87 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் வழங்க ரூ.1 கோடி நிதியை எனக்கு அனுப்பி வைத்தனர் என்றார்.
ஆனால் இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கவே எடுத்துச் செல்லப்பட்டதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் ப்ரித்விராஜ் சவான் மற்றும் காங்கிரஸார் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர் என்று அது மேலும் குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கிடையே அமராவதி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஏழை வேட்பாளர்களுக்கு வழங்கவே அந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த பணம் குறித்து விசாரணை நடத்துமாறு மாநில தேர்தல் ஆணையம் கலெக்டர் ராகுல் மஹிவால் மற்றும் முனிசிபால் கமிஷனர் நவின் சோனா ஆகியோரைக் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications