சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி நிறைவு விழாவில் ஜெ. சொன்ன அமெரிக்க ராணுவ வீரன் கதை
சென்னை: சென்னையில் நேற்று நடந்த சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா வழக்கம் போல ஒரு குட்டிக் கதை கூறினார்.
சென்னை, ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நேற்று நடந்தது. இதில் மொத்தம் 307 பெண் அதிகாரிகள் உள்பட 1061 சப்இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஒரு வருடமாக இவர்களுக்கு இங்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில் ஒரு கதை கூறினார். அந்தக் கதை...
வில்லியம் ஸ்காட் என்கிற கடமை தவறாத ராணுவ வீரன், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வந்தான். அவனுடன் பணிபுரியும் நண்பனுக்கு ஒரு நாள் உடல் நலம் சரியில்லை. ஆனால், அவனுக்கு அன்று பகல் நேரத்தில், காவல் காக்க வேண்டிய பணி. அவனுக்காக இரக்கப்பட்ட ஸ்காட், தன் நண்பனுக்கு பதிலாக, தானே காவல் காக்கும் பணியை செய்வதாகச் சொல்லி, அந்த பணியை மேற்கொண்டான்.
அன்று இரவும் ஸ்காட்டே பணிபுரிய வேண்டும் என்கிற விஷயம் தெரிய வந்தது. தொடர்ந்து கண் விழித்தால், தூக்கம் வந்துவிடும்; பின்னர் கடமையை சரிவர செய்ய முடியாது என்று நினைத்து, இரவு பணிக்கு வேறு யாரையாவது அமர்த்துமாறு தனது மேலதிகாரியிடத்தில் தெரிவித்தான். கண்டிப்புக்கு பெயர் போன மேல் அதிகாரி, அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
வேறு வழியில்லாமல், இரவு நேர காவல் பணியையும் ஸ்காட் ஏற்றுக் கொண்டான். ஒரு கட்டத்தில், அவனையும் அறியாமல், அவனுடைய கண் சொக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் மேற்பார்வையிட வந்த அதிகாரி, ஸ்காட் தூங்குவதாக, மேலதிகாரிக்கு தகவல் கொடுத்துவிட்டார்.
நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியினை மேற்கொள்ளும் போது, தூங்கும் வீரர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படுவது வழக்கம். அதன்படி, 24 மணி நேரத்தில் ஸ்காட்டை சுட்டுக் கொல்லும்படி உத்தரவு வந்துவிட்டது. ஆனால், இந்த மரண தண்டனையை ரத்து செய்யக்கூடிய அதிகாரம், அமெரிக்க ஜனாதிபதிக்கு தான் உண்டு. உண்மையான ராணுவ வீரனான ஸ்காட்டை காப்பாற்ற வேண்டும் என்று ஆப்ரகாம் லிங்கனிடம் முறையிடப்பட்டது. பின்னர் அதற்கான உத்தரவு அன்று இரவே பிறப்பிக்கப்பட்டது.
அதன் பின்னர், வாஷிங்டனிலிருந்து புறப்பட்டு வீரர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று ஸ்காட்டை ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் பார்த்தார். ஸ்காட்டின் தோளில் கை போட்டு, “நீ நாளைக்கு சாகப் போவதில்லை, நாட்டை காக்கப் போகிறாய்” என்று கூறினார். மேலும், “வாஷிங்டனிலிருந்து இங்கு வந்து, போனதற்கான செலவை நீ தான் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று ஸ்காட்டிடம் சொன்னார்.
“என் வங்கிக் கணக்கில் கொஞ்சம் பணம் இருக்கிறது. நிலத்தை அடமானம் வைத்து கொஞ்சம் கடன் வாங்குவேன். சம்பளத் தேதி வரைக்கும் பொருத்து இருங்கள், சம்பளத்தையும் சேர்த்து மொத்த செலவையும் கொடுத்து விடுகிறேன்” என்று ஸ்காட் ஜனாதிபதியிடம் கூறினார்.
உடனே, ஜனாதிபதி லிங்கன், “உன்னுடைய வங்கி சேமிப்பும், கடனும் என்னுடைய செலவை சரிகட்டாது. உன்னுடைய கடமைகளை நாட்டிற்கு ஒழுங்காக செய்தால் தான் செலவை சரிகட்ட முடியும்” என்று ஸ்காட்டிடம் கூறினார். ஸ்காட்டும் அப்படியே செய்வதாக உறுதிமொழி அளித்தார் என்று கதை கூறினார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications