கரூர் காவல் நிலையம் அருகேயே விபச்சார விடுதி: ஆளுங்கட்சி புள்ளி ஆதரவு-திமுக புகார்1
கரூர்: கரூரில் காவல் நிலையம் அருகே விபச்சார விடுதி நடைபெறுவதாக திமுக தலைமைக் கழக பேச்சாளர் மதி பொதுக் கூட்டத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் போலீஸார் நெளிந்தனர்.
கரூர் லைட்ஹவுல் கார்னரில் கடந்த 16ம் தேதி திமுக பொதுக்குழு விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கருரில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் பேசுவதாக இருந்ததால் கூட்டம் களைகட்டியது.
தீப்பொறி ஆறுமுகம் பேசுவதற்கு முன்னதாக மைக் பிடித்த தலைமைக் கழக பேச்சாளர் மதி, மாவட்ட நிர்வாகத்தில் அதிமுக நிர்வாகிகளின் அத்துமீறல்களை சுட்டிக் காட்டினார்.
அப்போது வேலாயுதம்பாளையம் காவல் நிலையம் அருகில் மாவட்டத்தில் உள்ள ஆளும் கட்சி முக்கிய நபர் ஒருவர் உதவியோடு ஒரு வீட்டில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒரிசா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை வைத்து விபச்சார விடுதி நடத்தப்படுவதாக குற்றம் சாட்டினார். ஆனால் இதனை காவல்துறை கண்டு கொள்ளாமல் கைகட்டி கொண்டு வேடிக்கை பார்க்கின்றது என்றார்.
போதாக்குறைக்கு விபச்சார விடுதி நடத்தும் நபரின் செல்போன் எண்ணையும் தெரிவித்தார். நீங்களும் இந்த நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது உண்மையா, இல்லையா என்று சோதித்து பாருங்கள் என்று சவால்விட்டார்.
பேச்சாளர் மதியின் சரமாரி குற்றச்சாட்டால், பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் நெளிந்து போய் விட்டார்கள்.












Click it and Unblock the Notifications