'ராமா ராமா' என்றுதான் போனேன், 'ராவணா ராவணா' என்று போகவில்லை-பி.எச்.பாண்டியன் 'சூப்பர்' பேச்சு!
சங்கரன்கோவில் இடைத்தேர்தலையொட்டி திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் குற்றாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.எச்.பாண்டியன், வருவாய்த்துறை அமைச்சர் கே.எஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் பேசினர்.
அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
உலக அரங்கில் அ.தி.மு.க.,வை அடையாளம் காட்டியவர் முதல்வர் ஜெயலலிதா. செம்மொழி மாநாட்டை நடத்தி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கருணாநிதி தீட்டிய திட்டத்தை முறியடித்துஆட்சியை பிடித்தவர் ஜெயலலிதா.
உள்ளாட்சி தேர்தலின் வெற்றி முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைக்கு கிடைத்தது. கடந்த 10 மாத ஆட்சியில் யாராலும் செய்ய முடியாத பல அரிய திட்டங்களை முதல்வர் செயல்படுத்தியுளள்ர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,அமோக வெற்றி பெறும். நெல்லை வடக்கு மாவட்டம் அ.தி.மு.க.,வின் எக்கு கோட்டை என்பது நிரூபிக்கப்படும். முதல்வர் பிறந்த நாள்விழாவை ஓராண்டு வரை கொண்டாட வேண்டும்.
மக்கள் அடிமனதை புரிந்து கொண்டு ஜெயலலிதா ஆட்சி நடத்தி வருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெறும். அப்போது இந்தியாவின் வழிகாட்டியாக அடுத்த பிரதமரையும் ஆட்சியையும் தீர்மானிக்கக் கூடியவராக முதல்வர் ஜெயலலிதா திகழ்வார் என்றார் அவர்.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பி.எச்.பாண்டியன் பேசியதாவது:
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்.,தொண்டர்கள், ஜெயலலிதா தொண்டர்கள் என இரண்டு வகையான தொண்டர்கள்தான் உள்ளனர். வியாபார நோக்கத்தோடு அ.தி.மு.க.வில் இருந்த சிலர் நீக்கப்பட்டு விட்டனர். கட்சியில் ஒருவரை பார்த்தால் எம்.பி.,ஆகிவிடலாம், எம்.எல்.ஏ., ஆகி விடலாம் என்ற நிலை தற்போது கிடையாது.
தொண்டர்களின் பாதுகாப்புக்கு முதல்வர் ஜெயலலிதாதான் இருக்கிறார். நான் 40 ஆண்டு காலமாக அ.தி.மு.க.,வில் இருந்து வருகிறேன். நான் எம்.ஜி.ஆர்., பின்னால் ராமா...ராமா...என்று கூறித்தான் சென்றேனே தவிர, ராவணா...ராவணா...என்று கூறி யார் பின்னாலும் செல்லவில்லை.
முதல்வர் ஜெயலலிதா கட்சியில் மாறுதலை புகுத்தியுள்ளார். அதனை தொண்டர்களாகிய நாம் ஏற்றுக் கொள்கிறோம். எம்.ஜி.ஆர்.,கொள்கையை முதல்வர் ஜெயலலிதா பின்பற்றி வருகிறார். கட்சியை யாரும் விலைக்கு வாங்க முடியாது. தொண்டர்களை ஏமாற்ற முடியாது. தொண்டர்கள் ஏமாற மாட்டார்கள்.
கருணாநிதியால் எம்.ஜி.ஆர்.காலத்தில் தலை தூக்க முடியவில்லை. தற்போது முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும் அவரால் தலை தூக்க முடியாது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து முதல்வரிடம் வழங்க தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
எந்த துறையாக இருந்தாலும் ஒழுக்கம் வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். கட்சியிலும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். தற்போது அ.தி.மு.க.,வின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
புல்லுருவிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். சில்லரை கொடுத்து இனி பதவியை பிடிக்க முடியாது. நான் ஆரம்ப கால தொண்டன். லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம்.
தொண்டர்கள் களங்கம் இல்லாதவர்கள். கட்சி, ஆட்சி லாபத்தை எல்லோருக்கும் பகிர்ந்து உண்ண வேண்டும். சங்கரன்கோவில் தேர்தல் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. வேகத்தோடு செயல்படுங்கள் என்றார் அவர்.