சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார்

சங்கரன்கோவில் தொகுதியில் மார்ச் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
தி.மு.க. சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு 41 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களிடம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேர்காணல் நடத்தினார்.
அவருடன், பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வேட்பாளர் அறிவிப்பு
ஒன்றரை மணி நேர நேர்காணலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கருணாநிதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தி.மு.க. தேர்தல் ஆட்சி மன்றக்குழு கூடி, நெல்லை மாவட்ட கழக செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள், சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்துள்ள கழக வேட்பாளர்கள் சார்பில் பரிந்துரைத்து வந்த கழக அமைப்புகளின் செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரிடமும் கலந்துபேசி, இறுதியாக எடுக்கப்பட்ட முடிவின்படி, சங்கரன்கோவில்
இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக வழக்கறிஞர் ஜெ.ஜவகர் சூரியகுமாரை வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.
கழக தொண்டர்கள், தோழமை கட்சி தலைவர்கள் மற்றும் அதனை சார்ந்த செயல்வீரர்கள் அனைவரும் கழக வேட்பாளரான ஜவகர் சூரியகுமாரை இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசலத்தின் உறவினர்
ஜவகர் சூரியகுமார் (வயது 41) எம்.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர்.
வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை பெயர் ஜேம்ஸ்.
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் தம்பி மகன் ஆவார்.
இவரது மனைவி பெயர் வாசுகி. இவருக்கு, ஜனனி என்ற மகளும், அருண் என்ற மகனும் உள்ளனர்.
சங்கரன்கோவில் நகர தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை செயலாளராக உள்ளார்.












Click it and Unblock the Notifications