அமெரிக்காவுக்குப் போகப் பயப்படும் இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ்
கொழும்பு: இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் அடுத்த மாதம் செல்லவுள்ளதாக திட்டமிட்டுள்ள தனது அமெரிக்க பயணத்தை ஒத்திவைக்கக் கூடும் எனத் தெரிகிறது.
கடந்தமாத இறுதியில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் எழுதிய கடிதம் ஒன்றில், மார்ச் மாதம் வாஷிங்டனுக்கு வந்து வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் மற்றும் இலங்கையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டிருந்தார்.
ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வது குறித்து பெரீஸ் ஆலோசிக்கலாம் என்றும் கூறப்படுகிறது..
பெரீஸ் தற்போது அமெரிக்க பயணம் செய்தால், ஹிலாரிக்கு அளித்த உறுதிமொழிகள் தொடர்பாக அறிக்கை வெளியிடவேண்டி வரலாம் என அஞ்சி அமெரிக்கா செல்லத் தயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் குறித்து அமெரிக்காவுடன் பேசுவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பை பெரீஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இலங்கையின் வெளியுறவு மூத்த அதிகாரிகள் சிலர் வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.