சங்கரன்கோவில் இடைத்தேர்தல்-பிரசாரத்தில் குதித்த கட்சிகள்-வானவேடிக்கை ஆரம்பம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் மெதுமெதுவாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளர்களை அறிவித்துள்ள கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை வேகப்படுத்தியுள்ளன.
சங்கரன்கோவில் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 16ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 22ந் தேதி தொடங்குகிறது.
அதிமுக சார்பில் முத்துசெல்வியும், திமுக சார்பில் ஜகவர் சூரியகுமாரும், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமாரும் தேமுதிக சார்பில் முத்துக்குமாரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுகவை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவில்லை என்றும். யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் அறிவித்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாளை முடிவெடுக்கவுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டு தமது திராணியை வெளிப்படுத்தப் போவதாக கூறியுள்ளது.
களத்தில்...
தேர்தல் தேதிக்கு முன்பே வேட்பாளரை அறிவித்த அதிமுக, 26 அமைச்சர்களை ஒட்டுமொத்தமாக சங்கரன்கோவிலில் குடியேற்றிவிட்டது. அதிமுக வேட்பாளரும் திராணியைக் காட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் ஆளா? இவர் ஆளா? என திமுகவின் ஹாட் டாப்பிக்காக வலம் வரும் ஜவஹர் சூரியகுமார் வாய்ப்பு கிடைக்காதவர்களை கோஷ்டி பாரபட்சமின்றி சந்தித்து ஆதரவு திரட்டத் தொடங்கியிருக்கிறார்.
மதிமுகவின் சதன் திருமலைக்குமாரும் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார்.
தேமுதிகவும் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் களத்தில் கால் வைத்து திராணியை வெளிப்படுத்தியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது.
கட்சிகளின் படை பரிவாரங்களின் பலத்தால் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications