நாகை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசி அட்டகாசம்-6 பேர் காயம்
நாகப்பட்டனம்: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கி அட்டூழியம் புரிந்துள்ளனர். இதில் 6 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். அரிவாளாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளதால், நாகை மாவட்டத்தில் கொதிப்பு எழுந்துள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த கப்பலில் இருந்த பாதுகாவலர்கள், கேரள கடல் பகுதியில் இரண்டு மீனவர்களை குருவி சுடுவது போல சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு மீனவர்களும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இந்த மீனவர்களுக்கு ஆதரவாக கேரளாவில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. மத்தியிலும், பாதுகாப்பு அமைச்சகமும், உள்துறை அமைச்சகமும், வெளியுறவுத்துறை அமைச்சகமும் இந்த விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
மலையாள மீனவ அமைப்புகள் இரு மீனவர்களையும் சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பலின் கேப்டனையும் கைது செய்யக் கோரி கேரளாவில் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
மறுபக்கம், தமிழக மீனவர்களை இலங்கைக்காரர்கள் தொடர்ந்து தாக்கி வரும் சம்பவம் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கிறது. அடுத்தடுத்து தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரும், மீனவர்களும் தாக்கி கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் அட்டூழியம் செய்துள்ளனர்.
நடுக்கடலில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. 6 படகுகளில் இலங்கை மீனவர்கள் வந்ததாகவும் பெட்ரோல் குண்டுகளை வீசியும், அரிவாளால் தாக்கியும் தங்களை விரட்டியதாக தப்பி வந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இநத் சம்பவத்தில் 6 மீனவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் நாகை மாவட்ட மீனவர்களிடையே பரபரப்பு நிலவுகிறது. இத்தாலி கப்பல் விவகாரத்தில் காட்டும் அதே வேகத்தில் பாதியையாவது எங்களது விவகாரத்திலும் மத்திய அரசு காட்ட வேண்டும் என்று நாகை மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications