கணவர் 10ம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்பதால் பெண் தற்கொலை: வரதட்சணை கொடுமை என்கிறார் தந்தை!
சென்னை: கணவன் வெறும் 10ம் வகுப்பு படித்தவர் என்பதாலும், தனக்கு நிகரான அழகில்லாதவர் என்பதாலும் திருமணமாகி 3 மாதங்களே ஆன பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் சீனிவாசா நகர் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் நித்தேஷ் (31). மரக்கடை உரிமையாளர். அவருக்கும் பிரஸி(25) என்ற பி.எஸ்.சி. பட்டதாரிக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணமானது.
இந்நிலையில் நேற்று பிரஸி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருமுல்லைவாயில் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் தெரிய வந்த தகவல்,
பிரஸியின் தந்தை பி.பி.ராஜன் கேரளாவைச் சேர்ந்தவர். அவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் லைன்மேனாக வேலை பார்க்கிறார். பெரம்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் வசித்து வருகிறார்.
பிரஸிக்கு தனது கணவர் வெறும் 10ம் வகுப்பு படித்தவர் என்பதும், தனக்கு இணையான அழகில்லாதவர் என்பதும் வருத்தத்தை அளித்துள்ளது. இதனால் அவர் கடந்த டிசம்பர் மாதம் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஒன்றரை மாதங்கள் கழித்து அவரை சமாதானப்படுத்தி அவரது தந்தை பிபி ராஜன் கடந்த 16ம் தேதி தான் கணவர் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பிரஸியின் தந்தை தனது மருமகன் மீது திருமுல்லைவாயில் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
திருமணத்திற்கு பிறகு நித்தேஷ் வரதட்சணை கேட்டு என் மகளை கொடுமைப்படுத்தி இருக்கிறார். இதனால் என் மகளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டேன். 11/2 மாதங்களுக்கு பிறகு மகளை சமாதானப்படுத்தி கணவர் வீட்டில் விட்டு விட்டு வந்தேன். வரதட்சணைக்காக என் மகளை அவளுடைய கணவரே அடித்து உதைத்து தீ வைத்து கொளுத்திவிட்டு எனக்கு உங்கள் மகள் தீக்குளித்து தற்கொலை செய்ததாக போன் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் தான் தற்கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரிய வரும்.