அமெரிக்காவின் குடியரசு கட்சி நிதிக் குழு தலைவராக இந்தியர் நியமனம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குடியரசு கட்சியின் நிதிக் குழு தலைவராக அமெரிக்கா வாழ் இந்தியரான அக்ஷய் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்து வருபவர் அக்ஷய் தேசாய். அமெரிக்கா வாழ் இந்தியர். அவர் புளோரிடாவில் இயங்கி வரும் யுனிவர்சல் ஹெல்த் கேர் குழுமத்தின் தலைவராக உள்ளார். இந்த நிலையில் அக்ஷய் தேசாய் அமெரிக்க குடியரசு கட்சியின் நிதிக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் லென்னி கர்ரி தெரிவித்துளளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சி எப்படியாவது வெற்றி பெற வேண்டும். புளோரிடா மாகாணத்தில் நீண்ட காலமாக வசித்து வரும் அக்ஷய் தேசாய் மக்களுக்கு நன்கு பழக்கமானவர். அதனால் கட்சியின் முக்கிய பொறுப்பில் அவரை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம் என்றார்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, குடியரசு கட்சியின் வரவு, செலவு கணக்குகளை அக்ஷய் தேசாய் தலைமையிலான குழு பார்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.