போலி ஆவணம் மூலம் இலவச மின்சாரம் பெற்றால் கடும் நடவடிக்கை - அமைச்சர் சுந்தர்ராஜன் எச்சரிக்கை
அருப்புக்கோட்டை: விசைத்தறி அமைப்பதாக கூறி போலி ஆவணம் மூலம் இலவச மின்சாரம் பெறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அருப்புக்கோட்டையில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன் ஆய்வு செய்தார்.
அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மத்திய, மாநில அரசுகள் இணைந்து, அருப்புக்கோட்டையில் கைத்தறி பூங்கா துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். கைத்தறி துறைக்கு சொந்தமான இடங்களை, தனியார் ஆக்கிரமிப்பு செய்திருந்தால், அவை சட்டப்படி முறையாக கைப்பற்றப்படும்.
விசைத்தறி அமைப்பதாக கூறி போலி ஆவணங்கள் மூலம் இலவச மின்சாரம் பெறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளிவரும்.
கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக் கூடாது. தரக்கட்டுப்பட்டு அதிகாரிகள் சோதனை செய்யும் போது அதனை யாரும் தடுக்க முடியாது. கைத்தறி சங்கங்களுக்கு ரூ.1,500 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளது. இதனை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெசவாளர்கள் மட்டும் பயன் பெறும் வகையில் மருத்துவக் காப்பீடு திட்டம் முறைப்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications