சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும்- ஜி.கே.வாசன் நம்பிக்கை
விழுப்புரம்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் சூரப்பட்டில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மின் பற்றாக்குறை உள்ளது. மின் தடையால் வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்படைந்து உள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் துவங்கினால் தமிழகம் விரைவாக வளர்ச்சி பெறும்.
9 துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று அறிவித்துள்ளனர். அதேபோல மாநில அரசின் நிபுணர் குழுவும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் 100 சதவீதம் பாதுகாப்பானது.
ஆனால் தனிநபர் தூண்டுதலால் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட முடியாமல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. பிரதமரை விமர்சனம் செய்யும் போராட்டக் குழுவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டால் தமிழகத்திற்கு கோடி நன்மைகள் ஏற்படும். அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் மத்திய அரசு ரூ.பல கோடி மதிப்பில் திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும். மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசின் திட்டங்கள் மூலம் பொது மக்கள் பல வழிகளில் பயன் பெற்று வருகின்றனர். அதேபோல தமிழக அரசின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு உதவிகள் செய்து வருகின்றது என்றார்.