பெண்களை 'செக்ஸி'யாக இருக்கிறீர்கள் என்று சொல்வதில் தவறில்லை-தேசிய மகளிர் ஆணையர் தலைவி பேச்சு
ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சர்மா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
யாராவது பெண்களைப் பார்த்து செக்ஸியாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. அது தவறான வார்த்தை கிடையாது. அதை பாசிட்டிவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அழகாக இருப்பதைத்தானே செக்ஸி என்கிறார்கள். எனவே அதில் தவறு ஒன்றும் கிடையாது என்று கூறியபோது கூட்டததில் இருந்த அத்தனை பேரும் ஸ்தம்பித்துப் போய் விட்டனர்.
மம்தா சர்மாவின் இந்தப் பேச்சுக்கு பல மகளிர் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் கூட்டத்திற்கு வந்த ஒரு மகளிர் அமைப்பின் தலைவியும் கூட கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகவும் துரதுரஷ்டவசமானது. பெரிய பொறுப்பில் உள்ள ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சி தருகிறு. இந்தக் கூட்டத்திற்கு வந்த அத்தனை பேருமே தற்போது மமதா பேசியது குறித்த விவாதத்தில் இறங்கி விட்டனர். மற்றவர்கள் பேசிய நல்ல உரைகளைக் கூட யாரும் சரிவரக் கவனிக்கவில்லை. இது வருத்தம் தருகிறது என்றார்.
மமதாவின் பேச்சுக்கு பியூசிஎல் பொதுச் செயலாளர் கவிதா ஸ்ரீவத்சவா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மமதா கூறுவதைப் பார்த்தால் பெண்களைப் போகப் பொருளாக அவர் கருதுவது போலத் தெரிகிறது. எனவே உடனடியாக அவரை தேசிய மகளிர் ஆணையத் தலைவி பொறுப்பிலிருந்து மத்திய அரசு நீக்க வேண்டும். அந்தப் பொறுப்புக்கு அவர் லாயக்கற்றவர் என்றார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் தேசிய மகளிர் ஆணையத் தலைவியாக நியமிக்கப்பட்டார் மமதா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவி இவர். இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டபோதே பெரும் சர்ச்சை கிளம்பியது. பிரதமர் அலுவலகத்திற்குப் புகார்களும் பறந்தன.
ராஜஸ்தான் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவராக 6 வருட காலம் இருந்தவர் மமதா. பின்னர் கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர்தான் அவர் தேசிய மகளிர் ஆணையத் தலைவியானார். இப்போது தனது 'செக்ஸி' பேச்சால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.