மேலும் ஒரு கொள்ளையனின் உடல் அடையாளம் கண்டுபிடிப்பு
சென்னை: சென்னை வேளச்சேரியில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 கொள்ளையர்களில் மேலும் ஒருவரின் உடல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெருங்குடி மற்றும் கீழ்க்கட்டளை ஆகிய இரு இடங்களில் உள்ள வங்கிகளில் கொள்ளையடித்த கும்பல் வேளச்சேரி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வீட்டில் தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்றபோது அவர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டதாக கூறப்படுகிறது. இதில் கொள்ளையர்கள் ஐந்து பேரும் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் மாநிலங்கள் குறித்த விவரங்களை அவர்கள் வைத்திருந்த அடையாள அட்டைகளை வைத்து போலீஸார் வெளியிட்னர். அவர்களில் வினோத்குமார் என்பவன்தான் கொள்ளைக்கூட்டத் தலைவன் என்றும் கூறப்பட்டது. ஐவரில் நான்கு பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவன் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவன் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வினோத்குமாரின் உண்மையான பெயர் சுஜாய் குமார் ரே என்று அவனது பெற்றோர் நேற்று நேரில் வந்து உடலை அடையாளம் காட்டியபோது தெரிவித்தனர். இதையடுத்து அவனது உடலை பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் மற்ற நால்வரின் அடையாளங்களைக் காணும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போது அதில் ஒருவரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவனின் பெயர் வினய் பிரசாத். இவன் பீகார் மாநிலம் நாலந்தாவைச் சேர்ந்தவன் என்று அந்த மாவட்ட எஸ்.பி. உறுதிப்படுத்தியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து வினய் பிரசாத்தின் உடலை அவனது பெற்றோரிடம் ஒப்படைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மற்ற மூவரின் உடல்களை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.
வீட்டைப் பார்வையிட அனுமதி மறுப்பு
இதற்கிடையே மார்க்ஸ் என்பவரின் தலைமையிலான சமூக நல அமைப்பு ஒன்று, வேளச்சேரியில் என்கவுண்டர் நடந்த வீட்டை இன்று பார்வையிட வந்தது. 10 பேர் கொண்ட குழுவினர் அங்கு வந்தபோது போலீஸார் அவர்களை அனுமதிக்க மறுத்து விட்டனர்.
தற்போது வீடு மாஜிஸ்திரேட் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே மாஜிஸ்திரேட் அனுமதியுடன் மட்டுமே வீட்டைப் பார்வையிட முடியும். அருகில் வசிப்பவர்களுடன் பேச முடியும் என்று போலீஸார் கூறி விட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications