குடும்பத்தோடு சங்கரன்கோவிலில் முகாமிட்டு பிரசாரத்தில் குதிக்கிறார் விஜயகாந்த்!
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தலைவர்களின் பிரசார தேதி நெருங்க நெருங்கதேர்தல் களமும் சூடு பிடிக்கிறது.
ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ சங்கரன்கோவிலில் முதன்முதலாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டார். வரும் மார்ச் 13ல் முதல்வர் ஜெயலலிதாவும், மார்ச் 15ல் தி.மு.க.,தலைவர் கருணாநிதியும், இடையே மார்ச் 12ம்தேதி துவங்கி மூன்று நாட்களுக்கு தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலினும் பங்கேற்கின்றனர்.
இதற்கிடையே தே.மு.தி.க.,வினரும் களத்தில் இறங்கியுள்ளனர். கட்சிக்கு தேர்தல் அலுவலகம், பிரசாரத்திற்கு வரும் விஜயகாந்த் மனைவி, மைத்துனர் என குடும்பத்தோடு தங்குவதற்கு வீடு போன்றவற்றை கட்சியினர் தயார் செய்து வருகின்றனர்.
விஜயகாந்த், மனைவி பிரேமலதா மற்றும் மச்சான் சுதீஷோடு தொகுதியிலேயே தங்கி பட்டிதொட்டியெங்கும் சென்று தீவிரப் பிரசாரம் செய்யவுள்ளனராம். ஆளுக்கு ஒரு ஊராகப் போய் பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.