நான் அருணாச்சல் பிரதேசம் போனதை சீனா எப்படி விமர்சிக்கலாம்-ஏ.கே. அந்தோணி கண்டனம்
டெல்லி: அருணாசலப்பிரதேசத்துக்கு தான் பயணம் மேற்கொண்டது தொடர்பாக சீனா அதிருப்தி வெளியிட்டதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
அருணாசலப் பிரதேசமும் ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதிதான். இந்த பகுதிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் பயணம் செய்வது எனது கடமையும் உரிமையும் கூட.
ஆனால் சீனாவின் இத்தகைய ஆட்சேபனை ஆச்சரியமளிக்கிறது. துரதிர்ஷ்டவசமானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.
1984-ம் ஆண்டிலிருந்தே அருணாசலப்பிரதேசத்துக்கு நான் பயணம் செய்து வருகிறேன். அந்த மாநிலம் உருவாக்கப்பட்ட தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அருணாசலப்பிரதேசம் இப்போது வளர்ச்சி அடைந்திருக்கிறது. அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் எதிர்ப்பு
நீர்மூழ்கிக் கப்பல்களில் அணு ஆயுதம் பொருத்துவதற்கு பாகிஸ்தான் தெரிவித்துள்ள எதிர்ப்பு அர்த்தமற்றது. நாட்டைப் பாதுகாக்கத்தான் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறதே தவிர போருக்கு அல்ல.
இந்தியாவின் பாதுகாப்பை வலிமைப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கைகள் அவசியமோ அதை இந்தியா மேற்கொள்ளும் என்றார் அவர்.
சீனாவின் கருத்து
அருணாசலப்பிரதேசத்தில் அந்தோணி சுற்றுப் பயணம் செய்ததன் மூலம் இருநாட்டு எல்லை சிக்கலை இந்தியா தீவிரப்படுத்துகிறது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அருணாச்சல் பிரதேசத்தை தனது நாட்டின் ஒரு பகுதியாக கூறி வரும் விஷமம் பிடித்த சீனா, அருணாச்சல் பிரதேசத்திற்கு யார் போனாலும் தாம் தூமென்று குதித்து பிரச்சினையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications