அமைச்சர் நாராயணசாமி தங்க இருந்த அறையில் திடீர் தீ-அறை எரிந்து சாம்பல்
காரைக்கால்: மத்திய அமைச்சர் நாராயணசாமி காரைக்காலில் தங்க இருந்த அரசினர் விருந்தினர் மாளிகையில், அவர் தங்கவிருந்த அறையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. இதில் ஆளுநர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், அரசு விருந்தினர்கள் தங்க குளிர்சாதன வசதி செய்யப்பட்ட சூட்கள், அறைகள் உள்ளன.
நேற்று காரைக்கால் வந்த நாராயணசாமி தங்குவதற்காக ஒரு சூட்டை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் நாராயணசாமி வரும் நேரம் நெருங்கிய நிலையில், திடீரென அவரது அறையிலிருந்து குபுகுபுவென புகை வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விருந்தினர் இல்ல அதிகாரிகள் தீயணைப்புத்துறைக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. ஆனால் அங்கு மிகப் பெரிய ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்ததால், அது தானாக ஆன் ஆகி ஓடத் தொடங்கியது. இதனால் எப்படி மின்சாரத்தை நிறுத்துவது என்று அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.
இதையடுத்து எலக்ட்ரீஷியன் ஒருவரை வரவழைத்து போராடி ஜெனரேட்டரை ஆப் செய்தனர். ஆனால் அதற்குள் அறை முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது.
உள்ளே போக முடியவில்லை. அந்த அளவுக்கு கதவு, ஜன்னல், வாசல் என நாலாபுறம் தீ எரிந்தது. இதையடுத்து ஜன்னல் கண்ணாடி ஒன்றை உடைத்து அதன் வழியாக உள்ளே தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். பின்னர் போய் பார்த்தபோது அறையில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து போய் விட்டன.
ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏர்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவம் நடந்தபோது நாராயணசாமி அறையில் தங்கவில்லை. அவர் வருவதற்கு முன்பே விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தீவிபத்தைத் தொடர்ந்து நாராயணசாமி அரசினர் விருந்தினர் இல்லத்திற்கு வரும் திட்டத்தை ரத்து செய்து விட்டார்.












Click it and Unblock the Notifications