சந்திரபாபுவிடம் பினாமியாக மட்டும் 320 ஏக்கர் நிலம் உள்ளது-சந்திரசேகர ராவ்
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம், பினாமியாக மட்டும் 320 ஏக்கர் நிலம் உள்ளது என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் கே.சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.
இதுதொடர்பான ஆவணங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இத்தனை நிலமும் நெல்லூர் மாவட்டத்தில் இருக்கிறதாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த நிலத்தில் 17 ஏக்கர் நிலம் தலித்துகள், பழங்குடியின மக்களுக்குச் சொ்ந்தமானதாகும். இதை தனது மகன்கள், மனைவி பெயரில் அபகரித்துள்ளார் நாயுடு. அவர் 1995ம் ஆண்டு முதல்வர் பதவியில் அமர்ந்தபோது, இந்த நிலங்களை தனது உறவினர்கள் பெயருக்கு மாற்றி விட்டார். பினாமி பெயர்களில் நிலங்களை குவிப்பது குறித்த கலையில் நிபுணர் நாயுடு. அடுத்தவர் பெயர்களில் எப்படி நிலங்களை வாங்கிக் குவித்து பத்திரமாக பராமரிக்கலாம் என்பதில் அவருக்கு மாஸ்டர் டிகிரியே கொடுக்கலாம்.
2001ம் ஆண்டு நாயுடுவின் மகன் லோகேஷுக்கு ஒருவர் 7 ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக கொடுத்தார். உண்மையில் அந்த நிலமே நாயுடுவின் நிலம்தான். நிலத்தை அன்பளிப்பாக கொடுத்தவர் நாயுடுவின் பினாமி ஆவார். தனது பினாமி நிலத்தை இப்படி மறைமுகமாக தனது நிலமாக மாற்றிக் கொண்டார் நாயுடு. சட்டத்தின் கண்களில் இப்படி மண்ணைத் தூவுவதில் கில்லாடி நாயுடு.
நாயுடு வைத்துள்ள நிலங்கள் குறித்து விரிவாக விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெலுங்கு தேசம் கட்சியில் தெலுங்கானாக்காரர்கள் அத்தனை பேரும் கிட்டத்தட்ட அடிமைகள் போலவே உள்ளனர். தெலுங்கானாவைச் சேர்ந்த யாராவது அக்கட்சியின் தலைவராக முடியுமா?. குறைந்தது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காவது வர முடிந்ததா?. இதுகுறித்து கட்சித் தலைமையிடம் கேள்வி கேட்கும் தைரியம் தெலுங்குதேசத்தைச் சேர்ந்த தெலுங்கானா தலைவர்களுக்கு உள்ளதா? என்றார் ராவ்.












Click it and Unblock the Notifications