மதுரை காவல் நிலையத்தில் நகைப்பட்டறை தொழிலாளி பலி: சிபிசிஐடி விசாரணை கோரும் சிபிஎம்
மதுரை: மதுரை காவல் நிலையத்தில் நகைப்பட்டறை தொழிலாளி பலியான சம்பவத்தை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக் குழு சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது,
மதுரை தெற்குமாசி வீதி பச்சரிசிகாரத் தெருவில் நகைப்பட்டறை தொழில் செய்து வந்தவர் ஏ.சரவண குமார். அவரை கடந்த 18ம் தேதி அதிகாலை 4 மணியளவில் மப்டியில் வந்த 6 போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சரவண குமாரின் வீட்டு பிரோவில் இருந்த இடப்பத்திரங்கள், 5 பவுன் நகை, வங்கி பாஸ்புக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் சரவண குமாரின் தந்தை ஆறுமுகம், அவரது மனைவி கலா ராணி, அவரது குழந்தைகள் சந்தானலட்சுமி, சதீஷ் ஆகியோரை திலகர் திடல் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சரவண குமாரின் குடும்பத்தினரை காவலர்கள் மிரட்டியதுடன் அவர்களை விடுவிக்க ரூ.3 லட்சம் கேட்டு இரவு 10 மணி வரை மிரட்டி உள்ளனர்.
பணம் கொண்டு வருவதாகக் கூறிய பிறகு சரவண குமாரின் மனைவி மற்றும் குழந்தைகளை மட்டும் வெளியே அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அவரது மனைவி தன்னுடைய மற்றும் குழந்தைகளுடைய நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் ரூ. 2 லட்சத்தை போலீசாரிடம் கொடுத்தார். மேலும் அவரது தந்தை ஆறுமுகமும் போலீசாருக்கு ரூ. 1 லட்சம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்ட சரவண குமாரின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்காமல் மதுரை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு மீண்டும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில் நகைப்பட்டறை தொழிலாளி ஒருவரை சட்டவிரோதமாக கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்து மரணமடையச் செய்த திலகர் திடல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட காவலர்களை தமிழக அரசு உடனே பணி இடை நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும். அத்துடன் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.