டிராபிக் போலீஸ் கன்னத்தில் 'பளார்' விட்ட மமதாவின் சகோதரர் மகன் கைது
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் சகோதரரின் மகன் போக்குவரத்து போலீஸை கன்னத்தில் அறைந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் சகோதரரின் மகன் ஆகாஷ் பானர்ஜி. இன்று ஆகாஷ் கிட்டர்பூரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் போக்குவரத்து விதிகளை மீறி ஒன்வேயில் சென்றார். இதைப் பார்த்த போக்குவரத்து போலீஸ் ஒருவர் அந்த காரை நிறுத்தினார். அப்போது காரில் இருந்து ஆகாஷ் மற்றும் 2 பேர் கீழே இறங்கி வந்தனர்.
தங்கள் காரை நிறுத்தி கேள்வி கேட்ட போக்குவரத்து போலீஸை அவர்கள் திட்டியது மட்டுமில்லாமல் அவரைத் தாக்கவும் செய்தனர். ஆகாஷ் போலீஸை கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து அந்த 3 பேரும் வாட்கங்கே காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்ட்டனர். ஆனால் மமதாவின் உறவினர் என்பது தெரிய வந்ததும் அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதன் பிறகே வழக்குப் பதிவு செய்து ஆகாஷ் பானர்ஜி கைது செய்யப்பட்டார்.