டெல்லியில் 2 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கைது: வெடிபொருட்கள் பறிமுதல்
டெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் வைத்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 2 பேரை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இஸ்ரேல் தூதரக கார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று டெல்லி ரயில் நிலையத்தில் வைத்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர். அந்த 2 பேரும் ஜார்க்கண்ட் வழியாக டெல்லி வந்துள்ளனர். அவர்கள் டெல்லிக்குள்ள வந்ததில் இருந்தே உளவுத்துறை அவர்களை ரகசியமாக பின்தொடர்ந்தது.
தனிப்படையினர் இந்த கைது குறித்து வாய் திறக்காவிட்டாலும் அந்த 2 பேரிடம் இருந்து பல முக்கியமான அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அவர்கள் விவிஐபிக்களையும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதிகளையும் தாக்கும் திட்டத்தோடு டெல்லி வந்துள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.