ஜெயலலிதாவை உதயக்குமார் சந்தித்துப் பேச்சு-தீருமா சிக்கல்
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் தொடர்பாக மாநில அரசின் குழு தனது அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று தாக்கல் செய்து விட்ட நிலையில் இன்று முதல்வரை சந்தித்தார் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார்.
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை தொடர்பாக ஆய்வு செய்த மாநில அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் செவ்வாய்க்கிழமை வழங்கியது.
அணு மின் நிலைய விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் இனியன் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இனியன், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆவார். இதன் உறுப்பினர்களாக இந்திய அணுமின் கழக முன்னாள் தலைவர் எம்.ஆர்.ஸ்ரீநிவாசன், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் அறிவு ஒளி, முன்னாள் தலைமைச் செயலாளர் விஜயராகவன் ஆகியோர் இடம் பிடித்தனர்.
இந்த் குழு சமீபத்தில் கூடங்குளம் சென்று ஆய்வு மேற்கொண்டது. போராட்டக்காரர்களையும் சந்தித்துப் பேசி கருத்தை வாங்கியது.
அதன் பின்னர் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தனது அறிக்கையை குழு அளித்தது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அணு உலை எதிர்ப்புக் குழுத் தலைவர் உதயக்குமார் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.
முன்னதாக இதுகுறித்து உதயக்குமார் கூறுகையில், திறந்த மனதுடன் முதல்வரைச் சந்திக்கச் செல்கிறோம். மக்களுக்கு ஆதரவான நிலையை முதல்வர் எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இனியன் குழு அறிக்கையில் என்ன உள்ளது என்பது எங்களுக்குத் தெரியாது. முதல்வரை சந்திக்கும்போது அதுகுறித்து தெரியலாம் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும் இனியன் குழு எங்களது மக்களை முழுமையாக சந்திக்கவில்லை.
முதல்வரைச் சந்தித்துப் பேசிய பின்னர் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications