ஐ.நா. மனித உரிமை ஆணைய தீர்மானம்: இலங்கையை இந்தியா ஆதரிக்கக்கூடாது- ராமதாஸ், வைகோ
சென்னை: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மேற்கத்திய நாடுகள் கொண்டு வரவிருக்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை அரசை இந்தியா ஆதரிக்கக் கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்காக அந்நாட்டு ஆட்சியாளர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரி, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மேற்கத்திய நாடுகள் கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று இலங்கை அமைச்சர் மகிந்தா சமரசிங்க கூறியிருக்கிறார். இது பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இலங்கை போர் முடிவடைந்ததும் அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 2009ம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் ஜெர்மனி உள்ளிட்ட 16 நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்திருந்தால் இலங்கை இனச்சிக்கல் இந்நேரம் தீர்க்கப்பட்டிருக்கும்.
ஆனால் இலங்கை அரசை பாராட்டும் வகையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற இந்தியா உதவி செய்தது.
இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே உள்ளிட்ட நாடுகள் கொண்டு வரவுள்ளன. இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அரசின் இந்த முடிவு மன்னிக்க முடியாத பெரும் குற்றமாகும்.
எனவே, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா முடிவு செய்திருந்தால் அந்த முடிவை உடனடியாக கைவிடவேண்டும். ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
பிரதமருக்கு வைகோ கடிதம்
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில், 2009ல் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் போர்க் காலத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டுகின்ற வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியா பெரிதும் உதவியது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழ் இனத்துக்கு எதிராக மேற்கொண்ட, மன்னிக்க முடியாத துரோகமாகும்.
இப்போது, ஜெனீவா நகரில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கை அரசின் போர்க்குற்ற நடவடிக்கைகளை விசாரிப்பதற்கான ஒரு தீர்மானத்தை, அமெரிக்காவும், மேலும் பல நாடுகளும் கொண்டு வருகின்றன. அத்தகைய ஒரு தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும். இலங்கை அரசுக்கு எவ்வித ஆதரவும் அளிக்கக்கூடாது.
ஆனால், மகிந்த சமரசிங்கே என்ற இலங்கை அரசுப் பிரதிநிதி "இந்தியா இலங்கை அரசை ஆதரிக்கும்'' என்று தெரிவித்திருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது. இது உண்மையாக இருக்குமானால், இந்த நடவடிக்கை, ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்தியா செய்கின்ற மன்னிக்க முடியாத துரோகமாகும்.
உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் இலங்கை அரசு நிறுத்தப்படுவதைத் தடுக்க இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளுமானால், இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலைக்கு இந்தியாவும் பொறுப்பு; கூட்டுக் குற்றவாளி என்ற நிலைமையே ஏற்படும்.
ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு ஆதரவான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications