சீனாவுக்கு கடத்தவிருந்த ரூ.2.80 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 2 பேர் கைது
சென்னை: சென்னை துறைமுகத்தில் கேழ்வரகு மூட்டை என்ற பெயரில் போலி ஆவணம் தயாரித்து சீனாவுக்கு கடத்த முயன்ற ரூ.2.80 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் மூலமாக சீனாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருவாய் புலனாய்வு துறை தென் மண்டல இயக்குனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் ஏற்றுமதிக்காக கப்பலில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்களை கண்காணித்தனர்.
அப்போது குறிப்பிட்ட கண்டெய்னரில் கேழ்வரகு மூட்டைகள் ஏற்றப்பட்டிருப்பதாக சுங்கத் துறையினரால் சீல் வைக்கப்பட்டு இருந்தது. இதில் சந்தேகமடைந்த வருவாய் துறை அதிகாரிகள் கண்டெய்னரை திறந்து பார்த்தனர். அப்போது அதில் 22,000 கிலோ எடையுள்ள செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.2.20 கோடி ஆகும்.
செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக அடையார் சாஸ்திரி நகரை சேர்ந்த ரவி(47), காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரை சேர்ந்த மோகனரங்கம்(31) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து இந்தோனேசியா, சுமத்திரா தீவு வழியாக சீனாவுக்கு மேற்கண்ட கண்டெய்னர் பெட்டி கடத்தப்பட இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
அதேபோல ஆந்திராவில் இருந்து பஞ்சாப், லூதியானா வழியாக மலேசியாவுக்கு சென்ற ஒரு கப்பலில் மின்சார உபகரணங்கள் அனுப்பப்பட்ட கண்டெய்னர் பெட்டிக்குள் செம்மரக்கட்டைகள் வைத்து கடத்தப்பட்டதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து மலேசியாவில் இருந்து குறிப்பிட்ட கண்டெய்னர் சென்னைக்கு திரும்ப கொண்டு வரப்பட்டது. வருவாய் துறை அதிகாரி அதனை சோதனையிட்ட போது அதில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் இருந்தன.
மேற்கண்ட இரு சம்பவங்களின் மூலம் மொத்தம் ரூ. 2.80 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளை வருவாய் புலானாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வுத் துறை தென்மண்டல இயக்குனர் ராஜன் பார்வையிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கட்டைகள் அதிகளவில் வளர்கின்றன. ஆனால் இவை அழிந்து வரும் இனம் என்பதால் வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சீனாவில் இசைக் கருவிகள், பொம்மைகள், மரச்சாமான்கள் ஆகியவை தயாரிக்க செம்மரக்கட்டைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் செம்மரக்கட்டைகள் சீனாவிற்கு கடத்தப்படுகின்றது.
கண்டெய்னரில் முதலில் கேழ்வரகு வைத்து சுங்கத் துறையினரால் சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகு சீலை உடைக்காமல், கண்டெய்னரில் இருந்த கேழ்வரகு அகற்றப்பட்டு அதற்கு பதிலாக செம்மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கண்டெய்னரை ஏற்றுமதி செய்த உரிமையாளரான காரைக்கால் திருநள்ளாறை சேர்ந்த ஏ.ஐ. என்டர்பிரைசஸ் உரிமையாளர் தாய்தேசா என்பவரை தேடி வருகின்றோம் என்றார்.












Click it and Unblock the Notifications