ராமேஸ்வரம் மீனவர்களுக்கு கெட்டுப்போன உணவு கொடுத்த இலங்கை கடற்படை: மீனவர்கள் புகார்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் தங்களுக்கு கெட்டுப்போன உணவைக் கொடுத்ததும் இல்லாமல் குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்கவில்லை என்று விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 25ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுககளி்ல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் அங்கு வந்த இலங்கை கடற்படை இருளாண்டி, சகாயம், ஜீவன்சன், பொன்னுசாமி ஆகியோருக்கு சொந்தமான 5 படகுகளையும், சீனிவாசன், ரமேஷ்குமார், முனியசாமி உள்ளிட்ட 22 மீனவர்களையும் பிடித்துச் சென்றது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் தலையீட்டால் அந்த 22 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
நேற்று ராமேஸ்வரம் வந்த 22 மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இலங்கை கடற்படையினர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த எங்களைப் பிடித்துக் கொண்டு தலைமன்னார் சென்றனர். பின்னர் அங்குள்ள காவல் நிலையத்தில் எங்களை ஒப்படைத்தனர். 26ம் தேதி விடுமுறை என்பதால் மறுநாள் எங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது எங்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அங்கு உணவு, உடை கொடுத்து உபசரித்தனர்.
இதையடுத்து நேற்று கடலோர காவல் படையினர் எங்களை இங்கு அழைத்து வந்தனர். அப்போது பசி என்று கேட்டதற்கு கெட்டுப்போன உணவைக் கொடுத்தனர். தாகத்திற்கு தண்ணீர் கூட கொடுக்காமல் அழைத்து வந்தனர். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications