திமுக அமைச்சர்கள் காலத்து உரிமங்களை மறுஆய்வு செய்ய கோரிக்கை
திருச்சி: தொலைத்தொடர்புத் துறையில் திமுக அமைச்சர்கள் இருந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன அகில இந்திய துணை பொதுச்செயலாளர் சி.கே.மதிவாணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ராசா மீதும் வழக்கு தேவை
வைமேக்ஸ் தொழில்நுட்பத்தில் 550 கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்ற ஊழல் தொடர்பாக பிஎஸ்என்எல் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குநர் குல்தீப் கோயல் உள்ளிட்ட அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ராசா மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
வைமேக்ஸ் என்பது கிராமங்களுக்கு கம்பியில்லாமல் வயர்லெஸ் மூலம் தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் திட்டமாகும். இதை பிஎஸ்என்எல் நிறுவனமே மேற்கொண்டிருக்கலாம். ஆனால் 4 தனியார் நிறுவனங்களுக்கு இதை அளித்ததன்மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. அந்த நிறுவனங்கள் பிஎஸ்என்எல் கட்டுமானங்களை பயன்படுத்தி சேவை வழங்கிவிட்டு 20 சதவீதத்தை மட்டுமே அரசுக்கு அளித்தனர்.
அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை
பிஎஸ்என்எல் ஒப்பந்தங்களை இறுதிசெய்வதில் அதிகாரிகள் மட்டுமே முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது. அமைச்சர்களின் கண் அசைவின்பேரில்தான் ஒப்பந்தங்கள் அளிக்கப்படுகின்றன. எனவே பிஎஸ்என்எல் ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக அமைச்சர்கள் பதவியில் இருந்த 7 ஆண்டுகாலத்தில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள், உரிமங்கள் அனைத்தையும் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications