சங்கரன்கோவிலில் 32 அமைச்சர்கள் குடியிருந்து பிரசாரம் செய்வதை எதிர்த்து வழக்கு
சென்னை: தமிழக அமைச்சர்கள் 32 பேர் சங்கரன்கோவில் தொகுதியில்தங்கியிருந்து பிரசாரம் செய்வதைத் தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த எஸ்.மஹாவீர் சிவாஜி என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நலன் மனுவில் கூறியுள்ளதாவது:
சங்கரன்கோவில் தொகுதியில் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முத்து செல்வி போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெறுவதற்காக அங்கு தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக அமைச்சரவையில் உள்ள 32 அமைச்சர்களை கொண்ட குழுவை முதல்வர் அமைத்திருக்கிறார்.
எனவே அவர்களால் மக்களுக்கு செய்ய வேண்டிய சட்டபூர்வமான கடமைகளை செய்ய முடியவில்லை. முதல்வரின் உத்தரவினால் 90 சதவீதம் அமைச்சர்கள் அந்த தொகுதியில் தேர்தல் பணிக்காக தங்கியுள்ளனர்.
இடைத்தேர்தல்களில் அமைச்சர்கள் தங்களது அதிகாரத்தையோ, அரசு எந்திரத்தையோ பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் விதியாக உள்ளது. ஆனால் சங்கரன்கோவில் தொகுதியில் சைரன் பொருத்திய அரசு கார்களில் அமைச்சர்கள் வலம் வந்து தேர்தல் பணியை செய்கின்றனர்.
இதை தடுத்து நிறுத்துவதற்காக கடந்த பிப்ரவரி 23-ந் தேதி தலைமை தேர்தல் கமிஷனருக்கு மனு கொடுத்தோம். கண் துடைப்பாக சில நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுகிறதே தவிர, முழுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
அந்த தொகுதியில் நேர்மை மற்றும் நியாயமான தேர்தல் நடக்கும் வகையில், எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் மஹாவீர். இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications