உத்தரப் பிரதேசத்தில் 7-ம் கட்ட வாக்குப் பதிவு
லக்னெள: உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் 7வது மற்றும் கடைசி வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
60 சட்டப்பேரவை இடங்களுக்காக 10 மாவட்டங்களில் இத்தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது தேர்தல் நடைபெறும் 60 தொகுதிகளில் 30க்கும் மேற்பட்டவையை கடந்த முறை பகுஜன்சமாஜ் கைப்பற்றி இருந்தது.
இறுதிக் கட்ட தேர்தலில் 962 வேட்பாளர்கள் களத்தில் உள்லனர். மொத்தம் 1.82 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
சமாஜ்வாதி கட்சியை இஸ்லாமியர்களின் நண்பராக அடையாளம் காட்டும் முகமது ஆசம் கான் போட்டியிடும் ராம்பூர் தொகுதிக்கும் இன்றுதான் தேர்தல்.
கோவா
கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
காலையில் வாக்குப் பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 20 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தன.
மர்கோவா தொகுதியில் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் திகம்பர் கமாத், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இத்தேர்தலில் 80 விழுக்காடு வாக்குகள் பதிவாகும் என்று எதிர்க்கட்சித் தலைவரான மனோகர் பரிக்கார் கூறியுள்ளார்.
மார்ச் 6-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.












Click it and Unblock the Notifications