கச்சத் தீவு திருவிழா: ராமேஸ்வரத்திலிருந்து சென்ற 4,283 பக்தர்கள்-உஷார் நிலையில் உளவுப் பிரிவினர்!

இந்தியா- இலங்கை இடையே உள்ள கச்சத் தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் இரு நாடுகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வது வழக்கம்.
இலங்கையில் போர் ஓய்ந்த பிறகு 2வது ஆண்டாக இன்று புனித அந்தோணியார் திருவிழா தொடங்கியது. இதையொட்டி இலங்கையை சேர்ந்த பாதிரியார்கள் மற்றும் பக்தர்கள் நேற்று மாலையே அங்கு வந்து விட்டனர்.
நாளை திருவிழா திருப்பலி பூஜையுடன் நிறைவு பெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 4,283 பக்தர்களும் பங்கேற்கின்றனர். இன்று அதிகாலை அவர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்துக்கு வந்து விட்டனர்.
இங்கு மத்திய உளவுப் பிரிவான ஐ.பி., சுங்கத்துறையினர், மாநில வருவாய்த் துறையினர், மாநில உளவுப் பிரிவினர், துறைமுக போலீசார், கடலோர காவல்படையினர் ஆகியோர் தமிழக பக்தர்களிடமும் தீவிர சோதனை நடத்தினர்.
பின்னர் காலை 8 மணிக்கு 145 விசைப் படகுகள், 35 நாட்டுப் படகுகளில் பாதிரியார் மைக்கேல்ராஜ் தலைமையில் இவர்கள் கச்சத் தீவுக்கு கிளம்பிச் சென்றனர்.
கச்சத் தீவு செல்லும் வழியெங்கும் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் பக்தர்கள் நாளையும் மதியம் தமிழகம் திரும்புவர்.
இலங்கை கடற்படையினரும் அவர்களது நாட்டு எல்லையில் தங்களது கப்பல்களை பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளனர். அதே போல இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரும் இந்திய கடற் படையினரும் பல்வேறு கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதற்கிடையே பாதுகாப்பை கருத்தில் கொண்டு ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் இருந்து இன்றும், நாளையும் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நம் வசம் இருந்த கச்சத் தீவை சிங்களர்களிடம் தந்துவிட்டு, அங்கு நமது மக்கள் செல்வதற்கு ஐ.பியில் ஆரம்பித்து லோக்கல் போலீஸ் வரை அனைவராலும் சோதனையிடப்பட்டு, ஏராளமான ஆவணங்களில் கையெழுத்து போட்டுவிட்டு, அந்தோணியார் திருவிழாவுக்கு மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications