அதிமுக பணபட்டுவாடா ஜோர்: டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிப்பு

சங்கரன்கோவிலில் வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. ஆரம்ப கட்டத்தில் மந்தமான நிலையில் பிரச்சாரத்தை துவங்கிய அதிமுக கடந்த 2 நாட்களாக சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட மேலநீலிதநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில் ஆகிய 3 யூனியன்களில் சுமார் 85 பஞ்சாயத்துகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடைத்தேர்தல் அலுவலகங்களை திறந்துள்ளது.
இடைத்தேர்தல் அலுவலகத்தில் நிர்வாகிகளாக செயல்படுபவர்களில் கிளைக்கு தலா 13 பேர் வீதம் சுமார் 1500 பேருக்கு பணபட்டுவாடா படு ஜோராக வழங்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக அதி்முக மேல்மட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் செழிப்பாக காணப்படுகின்றனர்.
சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட சேர்ந்தமரம், கடையாலூருட்டி, குருக்கள்பட்டி, பனவடலிசத்திரம், தேவர்குளம், கரிவலம்வந்தநல்லூர், திருவேங்கடம், குருவிகுளம், சங்கரன்கோவில் டவுன் ஆகிய பகுதிகளில் உள்ள 30 டாஸ்மாக் கடைகளில் கடந்த வாரம் வரை மதுபானங்கள் விற்பனை மந்தமாக இருந்தது. இந்நிலையில் கிராமப்புறங்களில் பணபட்டுவாடா ஜோராக செய்யப்பட்டதை அடுத்து சங்கரன்கோவில் தொகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கடந்த இரண்டு தினங்களாக மது விற்பனை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications