மனதை உருக்கிய வனக்காட்சி...இறந்த யானை உடலுக்கு காவல் நின்ற 10 யானைகள்!
கோவை: கோவையில் தோட்டம் ஒன்றில் இறந்து கிடந்த யானைக்கு 10 காட்டு யானைகள் காவலுக்கு நின்றன. இதையடுத்து பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டிய வனத்துறையினர் இறந்த யானையை அடக்கம் செய்தனர்.
கோவை மாவட்டம் ஆலாந்துறையை அடுத்த பூண்டிமடக்காடு கரியம்பதியில் ரங்கசாமி மிலிட்டரி தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போளூவாம்பட்டி வனச்சரக ரேஞ்சர் பார்த்திபன், பாரஸ்டர் ராமர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சுமார் சுமார் 25 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. அதன் வாயில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. பெண் யானை எப்படி இறந்தது என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் இறந்த யானையை சுற்றிலும் 10 காட்டு யானைகள் பிளறியபடி சோகத்துடன் நின்று கொண்டிருந்தன. இதனால் வனத்துறையினரால் இறந்த யானையை நெருங்க முடியவில்லை.
இதனையடுத்து பட்டாசுகள் வெடித்தும், சத்தம் எழுப்பியும் காவல் நின்ற யானைகளை வனத்துறையினர் விரட்ட முயன்றனர். ஆனால் காட்டில் சிறிது தூரத்திற்கு சென்ற அவை மேற்கொண்டு செல்ல மறுத்தன. இதனால் கோவை மாநகர வன அதிகாரி திருநாவுக்கரசு, பார்த்திபன், டாக்டர் மனோகரன் ஆகியோரின் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இறந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர்.
அதன்பிறகு இறந்த யானைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து அடக்கம் செய்தனர். யானையை அடக்கம் செய்யும் வரை காவல் நின்ற 10 யானைகளும் குறிப்பிட்ட தூரத்தில் நின்று பார்த்து கொண்டே இருந்தன. அதன்பிறகு அவை காட்டிற்கு சென்றுவிட்டன.
இறந்து போன ஒரு யானைக்காக 10 காட்டு யானைகள் காவல் நின்ற காட்சியை கண்ட வனத்துறையினர் விலங்குகள் இடையே உள்ள அன்பை கண்டு வியந்தனர்.












Click it and Unblock the Notifications