மாபெரும் மெஜாரிட்டியுடன் முலாயம் சிங் வெற்றி: காங்கிரஸ் ஆதரவு தேவையே இல்லை!

அந்த மாநில சட்டமன்றத்தில் 403 இடங்கள் உள்ளன. இங்கு ஆட்சியைப் பிடிக்க குறைந்தபட்சம் 202 இடங்கள் தேவை. ஆனால், காலையில் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, முலாயம் சிங் யாதவால் அதிகபட்சம் 188 இடங்களையே பிடிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், பிற்பகலில் அந்தக் கட்சி 226 இடங்களை தனித்தே பிடிக்கும் நிலைக்கு முன்னேறிவிட்டது.
முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் 77 இடங்களிலும், பாஜக 50 இடங்களிலும் காங்கிரஸ் 38 இடங்களிலும் மட்டுமே முன்னிலையில் உள்ளன. சிறிய கட்சிகளும் சுயேச்சைகளும் 12 இடங்களில் முன்னணியில் உள்ளன.
இதனால் அங்கு ஆட்சியைப் பிடிக்க முலாயம் சிங்குக்கு மற்ற கட்சிகளின் ஆதரவு தேவையே இல்லை.
முன்னதாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் மெஜாரிடிக்குத் தேவையானதை விட 20 இடங்கள் முலாயம் சிங்குக்குக் குறைவாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில் அவர் காங்கிரசின் ஆதரவைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மத்தியில் காங்கிரஸ் அரசை முலாயம் சிங் தானாகவே வெளியில் இருந்து ஆதரித்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு கிடைத்துள்ள பெரிய நிம்மதி என்னவென்றால், மாயாவதியின் பகுஜன் சமாஜுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய தோல்வி தான்.
ஒருவேளை மாயாவதியின் கட்சியும் 150 இடங்களில் வென்றிருந்தால், அவரும் பாஜகவும் கூட்டணி அமைத்து எந்த நேரத்திலும் முலாயம் சிங்கின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, அவர்கள் ஆட்சியமைக்க முயன்றிருப்பர்.
மாயாவதியைப் பொறுத்தவரை பதவிக்காக எந்த வகையான கூட்டணிக்கும் அவர் தயார் தான். அதே போல காங்கிரசும் மாயாவதியுடன் சேர்ந்து கொண்டு முலாயம் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றிருக்கும்.
ஆனால், இப்போது பெரும்பான்மைக்குத் தேவையான 202 இடங்களை விடத் தாண்டி 220க்கும் அதிகமான இடங்களைப் பெறும் நிலைக்கு முலாயம் சென்றுவிட்டார். இந் நிலையில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டு சேர்ந்தால் தான் முலாயம் அரசைக் கவிழ்க்க முடியும். இதில் பாஜக-காங்கிரஸ் கூட்டணி என்பது சாத்தியமே இல்லாத விஷயம்.












Click it and Unblock the Notifications