தீவிரவாத தடுப்பு மைய விவகாரம்: முதல்வர்கள் மாநாட்டைக் கூட்டக் கோரி பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: தேசிய பயங்கரவாத தடுப்பு மைய விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க மாநில முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டக் கோரி ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டில் உள்ள தீவிரவாத சக்திகளை ஒடுக்கும் வகையில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் என்ற அமைப்பை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட பல மாநில முதல்வர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதை கைவிடக் கோரி ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஏற்கனவே 2 கடிதங்கள் எழுதியுள்ளார். இந்நிலையில் தற்போது 3வது முறையாகவும் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் 17 மற்றும் 20ம் தேதிகளில் கடிதம் எழுதியுள்ளேன்.
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள், மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு வழிவகுப்பதாக உள்ளது என்பதையும் அதில் சுட்டிக்காட்டியிருந்தேன்.
எனது கடிதங்களுக்கு எந்த பதிலும் வராத நிலையில், தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து விவாதிப்பதற்காக இம்மாதம் 12ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க உள்துறைச் செயலாளர் மற்றும் மாநில போலீஸ் டிஜிபியுடன் வருமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது எனக்கு பெரும் வியப்பைத் தருவதாக உள்ளது.
மாநில அரசின் பங்களிப்பு இல்லாமல் பயங்கரவாத தடுப்பு மையத்தை அமைப்பது சாத்தியமில்லாதது. பயங்கரவாதத்தைத் தடுக்க என்னால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். அது தொடர்பாக பல யோசனைகளையும் தெரிவித்திருக்கிறேன். சிறப்பான உளவுப் பிரிவு, எப்போதும் உஷாராக இருப்பது, நவீன கருவிகளை கையாள உரிய பயிற்சி ஆகியவை பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமாகும்.
அதைவிடுத்து தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. பயங்கரவாதிகளைக் கைது செய்வது அவர்களிடம் ஆயுதங்களைப் பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய இணைச் செயலாளர், மாநில அரசின் உள்துறைச் செயலாளருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள சுற்றறிக்கை மூலம் அந்த அதிகாரம் மாற்றப்பட்டு பயங்கரவாத தடுப்பு மையத்திலுள்ள உளவுப் பிரிவு அதிகாரிகளுக்குச் சென்றுவிடும். இது மாநில அரசின் அதிகாரத்தை பறிப்பதாகும்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மத்திய உள்துறைச் செயலாளர் தலைமையில் நடக்கும் கூட்டம் இதற்கு பெரிய அளவில் எந்த நன்மையும் செய்வதாக இருக்காது. தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை பல மாநில முதல்வர்கள் ஏற்கனவே உங்களிடம் நேரடியாக தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு பிரச்னைகள் இருந்தபோதிலும் மார்ச் 12ம் தேதி டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் போலீஸ் டிஜிபிக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். இருப்பினும், தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு வரையறைக்கும் விளக்க அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதன் பின்னர் இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க மாநில முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications