பெட்ரோல் விலையை ரூ.5 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் நெருக்கடி-'கையை பிசையும்' மத்திய அரசு!

கடந்த டிசம்பர் மாதம் தான் கடைசியாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. அப்போது சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 109 டாலராக இருந்தது.
அதற்குப் பின்னர் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு அனுமதிக்கவில்லை. காரணம், 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள்.
இந்த இரண்டு மாத காலத்துக்குள் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்து ஒரு பேரல் 130 டாலர் என்ற நிலையை எட்டிவிட்டது. விலை உயர்த்தப்படாததால் ஒரு லிட்டர் பெட்ரோலை விற்றால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 5.10 நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் கடந்த 2 மாதங்களில் மட்டும் எண்ணெய் நிறுவனங்கள் ரூ. 900 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளன. இதனால் பெட்ரோல் விலையை உடனடியாக லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தினால் தான் இனிமேல் சமாளிக்க முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசிடம் கூறிவிட்டன.
ஆனாலும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் துவங்க உள்ளதால், பெட்ரோல் விலையில் கை வைக்க மத்திய அரசு கொஞ்சம் யோசித்து வருகிறது. ஏற்கனவே சட்டமன்றத் தேர்தல் தோல்விகளால் துவண்டு போயுள்ள மத்திய அரசு, நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த வேண்டுமானால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் எதிர்க் கட்சிகளின் ஆதரவும் வேண்டும்.
பெட்ரோல் விலையை ஒரேயடியாக ரூ. 5 உயர்த்தினால் திரிணமூல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கூட்டணிக் கட்சிகள் பிரச்சனை கிளப்பலாம். திரிணமூல் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா என்ன வேண்டுமானாலும் செய்வார். இதனால், விலையை உயர்த்துவதில் கொஞ்சம் தயக்கம் காட்டி வருகிறது மத்திய அரசு.
ஆனால், இந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 5,000 கோடி நஷ்டத்தை சந்தித்துவிட்ட எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தாவிட்டால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்குப் பணமில்லை என்று கை விரித்துவிடக் கூடிய சூழலும் உள்ளது. இதனால் விலையை லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ. 3க்குள் மத்திய அரசு உடனடியாக உயர்த்தும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசல் விற்பனையால் 13.55 ரூபாயும், ஒரு லிட்டர்மண்ணெண்ணை விற்பனையால் 29.97 ரூபாயும், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையால் 439 ரூபாயும் மத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
ஆனால், இவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தவே விடுவதில்லை. காரணம், ஓட்டு பயம். இதனால் ஏற்படும் நஷ்டத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசே மானியமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications