கேரளாவில் மீன்பிடி படகை இடித்த கப்பல் அதிகாரி கடலில் குதித்து தற்கொலை முயற்சி
சென்னை: கேரள கடல்பகுதியில் மீன்பிடி படகை இடித்த எம்.வி. பிரபுதயா சரக்கு கப்பலின் பாதுகாப்பு அதிகாரி கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை இலங்கை மீனவர்கள் காப்பாற்றிவிட்டனர்.
கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா துறைமுகத்தில் டான் என்ற படகில் 7 மீனவர்கள் கடந்த 1ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நள்ளிரவு நேரத்தில் சேர்த்தலா கடல் பகுதியில் மீன்பிடித்தபோது அந்த வழியாக வந்த சரக்கு கப்பல் அவர்களின் படகின்மீது மோதியது. இதில் படகில் இருந்த மீனவர்கள் கடலில் விழுந்தனர். அதில் 2 மீனவர்கள் கடலில் மூழ்கி பலியாகினர். 3 பேர் மாயமாகினர், 2 பேர் மட்டும் உயிருடன் கரை சேர்ந்தனர்.
விபத்து நடந்தது நள்ளிரவு நேரம் என்பதால் மீனவர்களால் கப்பலின் அடையாளத்தை கூற முடியவில்லை. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சிங்கப்பூரைச் சேர்ந்த டொனாலி கப்பல் நிறுவனத்தின் எம்.வி.பிரபுதயா என்ற சரக்கு கப்பல் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த கப்பலை விசாரணைக்காக சென்னை துறைமுகத்திற்கு வருமாறு இந்திய கடற்படை உத்தரவிட்டடது.
அதன்படி அந்த கப்பல் இலங்கையைச் சுற்றி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது விபத்து நடந்த சமயத்தில் கப்பலின் பாதுகாப்பு பொறுப்பில் இருந்த அதிகாரி ஒருவர் கடலில் குதி்த்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அந்நேரம் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் அவரைக் காப்பாற்றி திரிகோணமலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தகவலை அந்த கப்பல் நிறுவனத்தின் பத்திரிக்கை செய்தியும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த கப்பல் நேற்று சென்னை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அதன் பின்னர் கடற்படை அதிகாரிகள் கப்பலை ஆய்வு செய்துவிட்டு மாலுமிகளிடம் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த கப்பல் தான் படகை இடித்தது என்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications