அணுமின் நிலையத்தை திறக்கக் கோரி காயல்பட்டினத்தில் கடையடைப்பு
காயல்பட்டினம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்கக் கோரி அனைத்து கட்சி மற்றும் பொது நலஅமைப்புகளின் சார்பில் காயல்பட்டினத்தில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு அறிவித்துள்ள நேரத்தை விட கூடுதலாக மின்வெட்டு உள்ளது. இதற்கு காயல்பட்டினமும் விதிவிலக்கல்ல. காயல்பட்டினத்தில் 4 மணி நேரம் மின்தடை என்று அரசு அறிவித்திருந்த போதிலும் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவியர் தேர்வு நேரங்களில் படிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இரவு நேர மின்தடையால் நோயாளிகள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். திருட்டு பயமும் மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. மின்பற்றாக்குறையை போக்க கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்கக் கோரி காயல்பட்டினத்தில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பஜார் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
கடை அடைப்பையொட்டி அங்கு ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications