இனியாவது மாநிலங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுமா காங்கிரஸ்?

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு கவுண்ட்டன் தொடங்கிவிட்டது என்று கூறுகிற அரசியல் ஆய்வாளர் பாஸ்கர ராவ். உத்தர்ப்பிரதேசத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் காங்கிரஸ் கட்சி என்கிறார்.
பல்வேறு மாநில மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ளாமல் ஆட்சி செய்தாலும் பிரச்சாரம் மேற்கொண்டாலும் பெரும் தோல்வியையே சந்திக்க நேரிடும் எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அனைத்துக் கட்சியினரும் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா., இலங்கையுடனான உறவைப் பாதிக்காத வகையில் முடிவெடுப்போம் என்கிறோம். இத்தகைய மாநில மக்களின் உணர்வுகளுக்கு எதிரான போக்கே காங்கிரஸுக்கு அழிவை ஏற்படுத்தும் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம்போடுவதை அம்மாநில மக்கள் நன்கறிவார்கள். ஜெகன்மோகன் ரெட்டியின் புதிய கட்சி உதயமும் வேறு. இதனால் ஆந்திராவிலும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் முகாம் வெற்று கூடாரமாகிவிடக் கூடிய சூழல்தான்.
மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மாநில உரிமைகளுக்கான குரல் கொடுப்பதில் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் சளைத்துப் போகாது...துணிவோடு போராடக் கூடியது.
உத்தரப் பிரதேச மக்களோ தங்களது மனம்கவர்ந்தவர் "மெளலானா முலாயம்தான்" என நிரூபித்துவிட்டனர். 80 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கதாநாயகன் ராகுலுக்கு கிடைத்த "வரவேற்பு" நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்ப்லதை இப்போதே சொல்லிவிடும்!
ஒவ்வொரு மாநிலத்தின் பிரச்சனைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு அதனை நிறைவேற்றும் வகையில் காங்கிரஸ் இப்போதே செயல்படாவிட்டால் 2014 தேர்தல் முடிவின் போதும் "பாடம் கற்கிறோம்" என்றுதான் அம்மாவும் பிள்ளையும் (சோனியாவும் ராகுலும்) வாக்குமூலம் கொடுக்கவேண்டியதுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications