நாடாளுமன்றத்துக்கு விரைவில் இடைத்தேர்தலா?: சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ரயில்வே அமைச்சர் கருத்து

5 மாநில தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாளேடு ஒன்றுக்கு தினேஷ் திவேதி அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது:
தேர்தல் முடிவுகளையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமல்ல..சமாஜ்வாதி கட்சியிலிருந்தாலும் நாளையே நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்றால் மகிழ்ச்சியடைவேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதை விட முன்கூட்டியே தேர்தலை நடத்தினாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியடையும்.
காங்கிரஸுக்கு எதிரான அலை இருக்குமேயானால் பாரதிய ஜனதா கட்சியும் கூட இப்போது தேர்தலை நடத்துவதையே விரும்பும். எல்லோரும் தேர்தலை விரும்புவார்களேயானால் தேர்தல் நடைபெறும் என்று கூறியிருந்தார்.
சர்ச்சையும் விளக்கமும்
தினேஷ் திவேதியின் கருத்து சர்ச்சையை பற்ற வைத்திருக்கிறது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள திவேதி, தாம் தெரிவித்த கருத்து தனிப்பட்ட முறையிலானது... தாம் சார்ந்த கட்சியின் நிலைப்பாடோ அல்லது தாம் பங்கேற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினுடையதோ அல்ல.. தமக்கு கருத்துத் தெரிவிக்க சுதந்திரம் உள்ளது. அதையே தெரிவித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஜெயந்தி மறுப்பு
தினேஷ் திவேதியின் கருத்தை மத்திய அமைச்சரான ஜெயந்தி நடராஜன் நிராகரித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் ஜெயந்தி நடராஜன் கூரியுள்ளதாவது:
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யும்.
காங்கிரஸ் கட்சிக்கும் அதனது தோழமை கட்சிகளுக்கும் நல்ல உறவு நீடித்தே வருகிறது. மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் எப்படியாக இருந்தாலும் மத்திய அரசை பலவீனமடையச் செய்துவிட முடியாது.
உத்தர்காண்ட் மற்றும் மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி நன்றாக தேர்தல் பணி ஆற்றி இருக்கிறது என்றார் அவர்.
சுப்பிரமணியசாமி ஆரூடம்
இதனிடையே கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியசாமி, நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் விரைவில் வரும் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளதாவது:
நிதிநிலை அறிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். நாடாளுமன்றத்துக்கு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்தல் வரக்கூடும்.
புதிய குடியரசுத் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இல்லாமல், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராகவே இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பும் பின்பும் மத்திய அமைச்சர்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தெரிவிப்பவை அனைத்துமே சர்ச்சைகளாகவே உருவெடுக்கின்றன.












Click it and Unblock the Notifications