வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக வழங்க இருந்த திமுக கரை வேட்டிகள் பறிமுதல்!
சங்கரன்கோவில் : சங்கரன்கோவிலில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 34 மூட்டை திமுக கட்சிக்கரை வேட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சங்கரன்கோவில் தொகுதியில் வரும் 18 ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தொகுதி முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் அன்பளிப்பு அளித்து வருவதாக தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தடுக்கவும், அன்பளிப்பு வழங்குவதை தடுக்கவும் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், சங்கரன்கோவில் உள்ள நடராஜ விலாஸ் என்ற லாரி செட்டில் பறக்கும்படை தாசில்தார் உமா மகேஸ்வரி தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் லாரி செட்டில் இருந்த 34 மூட்டைகளை சோதனையிட்ட போது அதில் திமுக கட்சிக் கரையுடன் வேட்டிகள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், மதுரையில் இருந்து டிகேபி என்ற பெயரில் சங்கரன்கோவிலை சேர்ந்த ஆத்மாராவ் என்பவருக்கு வந்துள்ளதாக கண்டறிந்தனர்.
16 மூட்டைகள் எங்கே?
சங்கரன் கோவிலுக்கு லாரிகள் மூலம் 50 மூட்டைகள் வந்ததாகவும், இதில் 16 மூட்டைகள் மாயமாகிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதையடுத்து இந்த 34 மூட்டைகளையும் பறக்கும்படையினர் பறிமுதல் செய்து சங்கரன்கோவில் நகர காவல்நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications