விஜயகாந்த் சஸ்பெண்ட் விவகாரம்: சட்டவிதிமீறல் இல்லை என ஐகோர்ட்டில் அரசு அறிக்கை

பிப்ரவரி மாதம் 1-ந் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றபோது ஆளுங்கட்சியினரைப் பார்த்து எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் கையை நீட்டி, ஆவேசமாகப் பேசினார் என்பது குற்றச்சாட்டு. இதையடுத்து அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதாகக் கூறி அவர் சட்டப்பேரவையில் இருந்து 10 நாட்களுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவுக்குப் பதில் அளிக்கும்படி சட்டப்பேரவைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் வெள்ளிக்கிழமையன்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியுள்ளதாவது,
பிப்ரவரி மாதம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் நன்றி தெரிவித்து பேசினார்கள். அப்போது தே.மு.தி.க. உறுப்பினர் சந்திரகுமார் தெரிவித்த கருத்துகளுக்கு அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் திடீரென குறுக்கிட்டு, எதிரே இருந்த ஆளுங்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து கையை நீட்டி, விரலை ஆட்டிக் கொண்டு, நாக்கை சுழற்றியபடி மிரட்டல் விடுக்கும் வகையில் ஆவேசமாகப் பேசினார். அவரது பின்புறம் இருந்த தே.மு.தி.க. இதர உறுப்பினர்களும் எழுந்து நின்று கூச்சலிட்டனர். சட்டசபையின் பிற உறுப்பினர்கள், அன்றைய தினம் சபை நடவடிக்கைகளை காண வந்த பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்தது. இதற்கு வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் உள்ளன.
அவை நடவடிக்கைக்கு குந்தகம்
அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக விஜயகாந்தையும், அவரது கட்சி உறுப்பினர்களையும் அவையில் இருந்து வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இந்தப் பிரச்சினையை உரிமை மீறல் குழு விசாரணைக்கும் சபாநாயகர் உத்தரவிட்டார். இந்தக் குழுவில் விஜயகாந்தும், அவரது கட்சியைச் சேர்ந்த வேறு ஒரு உறுப்பினரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்தக் குழுவின் முன்பு ஆஜராகும்படி விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்பியும், உரிமை மீறல் குழு விசாரணையில் அவர் ஆஜராகவில்லை. மறுநாளும் விளக்கம் அளிக்க அவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. அப்போதும் அவர் வரவில்லை. தன்னை அமைச்சர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அவதூறு பேசியதாக மட்டும் விஜயகாந்த் மனு கொடுத்தார்.
சம்பளம் கிடையாது
உரிமை மீறல் குழுவின் அறிக்கை சட்டப்பேரவையில் மறுநாள் சமர்ப்பிக்கப்பட்டது. அதுதொடர்பான தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலம் நìறைவேறியது. அதன்படி, விஜயகாந்த் சட்டப்பேரவையில் இருந்து 10 நாட்களுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் சம்பளம் உள்பட எந்த சலுகையையும் பெற முடியாது என்றும் சபாநாயகர் உத்தரவிட்டார். எதிர்காலத்தில் இதுபோல எந்த உறுப்பினரும் நடந்து கொள்ளக்கூடாது என்பதால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சட்ட விதிமீறல் இல்லை
இதுபோல, 13-வது சட்டப்பேரவையில் அப்போதைய அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.கே.போஸ் சட்டசபையில் இருந்து 10 நாட்களுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சட்டசபையில் கையை நீட்டி ஆவேசமாகப் பேசிய விவகாரத்தில் விஜயகாந்த் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் எந்த வித சட்ட விதிமீறலும் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளும் மீறப்படவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications