சங்கரன்கோவிலை முற்றுகையிடும் தலைவர்கள்.. களைகட்டுகிறது இடைத்தேர்தல் திருவிழா!
சங்கரன்கோவில்: இடைத் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ள இன்னும் 5 நாட்களே உள்ளதால் சங்கரன்கோவிலில் பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தலைவர்கள் தொகுதியை முற்றுகையிட ஆரம்பித்துள்ளனர். இதனால் எங்கு பார்த்தாலும் இடைத் தேர்தல் பிரசாரமாக உள்ளது. போக்குவரத்து நெருக்கடியும் மக்களை சிரமப்படுத்த ஆரம்பித்துள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரம் 16ம் தேதி மாலை 5 மணியோடு முடிவடைகிறது. பிரசாரத்திற்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் சங்கரன்கோவிலில் மாநில தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் வாகனங்கள் அதிக அளவில் குவிந்து வருவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தி்முக பொருளாளர் ஸ்டாலின் 12, 13, 14 ஆகிய தேதிகளில் சங்கரன்கோவில் தொகுதிகளில் தீவிர சூறாவளி பிரச்சாரம் செய்கிறார். திமுக தலைவர் கருணாநிதி 15ம் தேதி சங்கரன்கோவில் வடக்கு ரத வீதி, மற்றும் மேலரதவீதி சந்திப்பில் நடைபெறும் பொது கூட்டத்தில் பேசுகிறார். ஏற்பாடுகளை மத்திய அமைச்சரும், தென்மண்டல அமைப்பு செயலாளருமான அழகிரி, நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா வரும் 14ம் தேதி தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்வதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் அவர் பெங்களூர் கோர்ட்டில் ஆஜாராக வேண்டியுள்ளது. இதனால் அவர் அன்று வருவாரா அல்லது வேறு நாளில் வருவாரா என்று தெரியவில்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று முதல் 15ம் தேதி வரை 6 நாட்கள் கிராமம் கிராமமாக சூறாவளி பிரச்சாரம் செய்கிறார்.
மதிமுக பொது செயலாளர் வைகோ, சமக தலைவர் சரத்குமார், ஆகியோர் சங்கரன்கோவில் தொகுதியிலேயே முகாமி்ட்டு அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜ வேட்பாளரை ஆதரித்து பாஜ மாநில பொது செயலாளர் இல கணேசன் நேற்று முன்தினம் முதல் தொகுதியில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இப்படி எங்கு பார்த்தாலும் கட்சிகளின் பிரசாரம் களை கட்டி வருவதால் சங்கரன்கோவிலில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. இது மக்களை முகம் சுளிக்க வைப்பதாகவும் உள்ளது. எப்பப்பா தேர்தல் முடியும் என்று மக்கள் மருகிப் போய் கேட்கின்றனர்.












Click it and Unblock the Notifications